Saturday, November 29, 2008

சில கிறுக்கல்கள்..

நான் தான் என்பது கூட
நினைவு படுத்தப்பட வேண்டியிருக்கிறது
நீ மனதினுள் நுழைந்த பின்..

உன்னைப் போல் பேசுகிறேன்,
உன்னைப் போல் நடக்கிறேன்,
உன்னைப் போல் சிரிக்கிறேன்..
மொத்தத்தில் என்னைத் தொலைத்து
முழுதாய் நீயாக மாறிவிட்டேன்..

என் இயல்பைத் தொலைக்கவிட்டு
இம்சித்துப் பார்க்காதே..
"பைத்தியம்" என்று பட்டம் வாங்கும்முன்
பதிலை சொல்லிவிடு "சம்மதமென்று"..
=====================================
காதலும் தொடர்வண்டி தான்..
அவனைத் தொடர்ந்து நீ..
உன்னைத் தொடர்ந்து நான்..
என்னைத் தொடர்ந்து யாரோ..??

நினைப்பது கிடைக்காது என்றாலும்
தொடர்தல் தொடர்கிறது, அழகான
நினைவுகளோடும் இனிமையான இசையுடனும்
தடதடத்த தண்டவாளம் எனும் வாழ்க்கையில்..
=======================================

வாழ்க்கைச் சூத்திரம்..

கடைசி வரை
காணாமல் போய்விடக்கூடும்
வெற்றியின் சுவடுகள்..

கடைசி வரை
தெரியாமல் போய்விடக்கூடும்
காத்திருத்தலின் அவசியம்..

கடைசி வரை
புரியாமல் போய்விடக்கூடும்
வாழ்க்கையின் ரகசியம்..

ஆனாலும் என்ன??
இருக்கும் வரை
இன்னொரு மாற்றத்திற்காய்
இலவுகள் காப்போம்..

நினைத்தது கிடைக்காவிடினும்
கிடைத்ததை கொண்டு
படைக்கலாம் இன்னுமொரு உலகம்..

எல்லாருக்குமே தரையிலிருந்து
எட்டும் தூரத்தில்தான்
வானம்..

சிறகுகள் இருந்தால்தான்
பறக்க முடியும்
என்பதல்ல சூத்திரம்..

சிந்தனை தெளிவுற்றால்
சாமானியனுக்கும் சாத்தியம்
சரித்திரமும், சாம்ராஜ்யமும்..

சமனற்ற கோளத்தைதான்
சீர்செய்ய லாகாது..
சீர்குலைந்த சமுதாயத்தையுமா
சீக்கிரம் மாற்ற வியலாது??

யார் மாற்றுவார்
என்பதல்ல கேள்வி..
நாம் மாறுவோம்..
நமைப்பார்த்து உலகம் மாறும்..

தேவை ஆண்டவனில்லை..அன்பு மட்டுமே..

அன்புக்கு காரணங்கள் தேவையில்லை
ஆனால்
ஆண்டவனுக்கு காரணம் தேவையாயிருக்கிறது..

அவனின்றி அசையாது ஓர் அணுவும்..
அசையும் அணுகுண்டுகளிலும்
அவனிருக்கிறானா என்பது அவனுக்கே வெளிச்சம்..

அவன் பெயரில் நடக்கும்
அத்தனை தவறுகளுக்கும்,
அமைதியாகவே இருக்கிறான் அவன்..

உயிர் பெற்றால், உணர்வுற்றால்
தீவிரவாதத்தின் துப்பாக்கிக்கும்
அழிவுசக்திகளின் அணுகுண்டுவுக்கும்
அவனும் ஆளாக வேண்டுமென்ற எண்ணமோ??

சகமனிதனின் வலி உணராதவரை
சர்வமும் படைத்தவனை பூஜிப்பதில்
சத்தியமாய் ஒரு ப்ரோயோஜனமுமில்லை..

ஆண்டவனைப் புரிவதில் தோல்வியுற்றாலும்
அது அவசியமில்லைஎன்றே தோன்றுகிறது..
வாருங்கள்.. அழிவை நோக்கிப் பயணிக்கும்
நம்மை நாமே காப்பதில் வெற்றி காண்போம்..

Friday, October 17, 2008

பறந்து போன பட்டுச்சிறகுகள்..

சிறகுகள் வளராத
பறவையாகத்தான்
வெளியுலகம் வந்தேன்..

கூட்டுக்கிளியாய் இருந்தது
போதுமென்று கொஞ்சம்
சிறகுகள் வளர்த்தேன்..
வளர்ந்த சிறகுகள்
வஞ்சனை துரோகம்
கேலிகள், கிண்டல்,
ஏமாற்றம் என எதையும்
ஏற்றுக்கொள்ள முடியாத
இளஞ்சிறகுகளாகவே இருந்தன..!!

எல்லாம் தெரிந்தும்
எத்தனையோ முறை
பறக்க முற்பட்டு
பல்லுடைந்த பறவையாய்..!!

இடிகள் விழ இனியும்
இடமில்லை மனதில்..
ஆயினும்..
சிறகுகள் முழுதும்
கவலை ரேகைகள்..
கலியுலகம் என்றாலும்
கரையேற வேண்டுமே..??

பட்டாம்பூச்சிகளின் பரிணாமம்
பாரங்கள் தாங்குவதில்லைஎன
சிந்தித்து சிலபொழுதுகள்
சிறகுகள் சீவுகிறேன்..

சீவிய சிறகுகள் சிலநேரங்களில்
சிலரது சிரங்களையும்
என்னின் சிரத்தையும்
குத்திய போது
குனிந்து தேடுகிறேன்
பறந்து போன
பட்டாம்பூச்சியின் பட்டுச்சிறகுகளை..!!!

என்ன வாழ்க்கையடா இது???

Thursday, October 16, 2008

என் யாசகம் உன் வாழ்க்கை..

ஆகிறது அரை வருடம்,
அவளும் நானும் பிரிந்து!!

காதலைச் சொல்லி காத்திருக்கையில்,
கள்ளச்சிரிப்புடன் சரியென்றுதான் சம்மதித்தாள்..
கூடவே சிரித்தது விதியும்..

பெற்றோருக்கு கொள்ளியிட விருப்பமின்றி
பொசுக்கினாள் மனதையும் காதலையும்..
அவசரமாய் அமைக்கப்பட்ட வாழ்வு
அழுகையுடன் முடிவுற்றது அவளுக்கு..

இன்றும் இருக்கிறேன் உனக்காக பெண்ணே..
இன்னொரு வாழ்க்கை வேண்டாமென்று
இனியும் என்னை அழவைக்க நினைக்காதே..
நம் காதலின் சாட்சியாய்
நான் வைத்திருக்கும்
கடைசி பரிசுப்பொருள் என் கண்ணீர்..

என் வாழ்விற்காய் யாசிக்கிறேன்,
உன் மிச்ச வாழ்க்கையை பிச்சையிடுவாயா?

Friday, September 26, 2008

என் தாய்க்கு ஒரேயொரு பதில்..

இந்த வருச வெள்ளாமையும்
வெளச்சல் எதுவும் தரலைன்னு
எங்கய்யனும் அம்மையும் சண்டை போட்டு
மாத்தி மாத்தி கொறை சொல்லி
மானம் போகுதுன்னும் கவலைப்படாம
மக்க ரெண்டும் அழுதுன்னும் பாக்காம
ஆத்திரப்பட்டு அள்ளி முடிஞ்ச கொண்டையோட
இந்த வீடுப்படியேற மாட்டேனு போயிட்டா எங்காத்தா..

சாயங்காலமா சங்கதி கேள்விப்பட்ட சின்னாச்சி
சலசலத்து சடவு சொல்லி என்ன
இழுத்துக்கிட்டு ஒவ்வொரு காடா தேடியலஞ்சா..
இருள் சூழ்ந்த கெணறுஎல்லாம் எட்டிப்பாத்தா..
என் ஆத்தா வைரக்கியமானவதான்.. ஆனாலும்
எந்தவொரு பிள்ளைக்கும் வரக்கூடாது என்நிலமை..
எங்கேயும் காணோமின்னு எங்கம்மைய கொறைசொல்லி
விட்டுப்போனா.. வேறென்னதான் செய்ய முடியும் அவளாலும்??

முந்தானைல மொகம் தொடைக்க வழியில்ல
மாருல தாங்கி முத்தமிட நாதியில்ல
மடியில சாச்சு தட்டிக்கொடுக்க கைகளில்ல
பெண்னெனக்கு ரெட்டப் பின்னலிட ஆளில்ல
பையனவன் பசி போக்க யாருமில்ல
பள்ளிக்கூட பாடம் தலைக்கேற வில்ல
பக்கத்துவீட்டுக் கெழவி கொடுத்த கஞ்சில
பரிதாபத்த பாத்து பசியடங்கிப் போறேன் பாவிமக!

வக்கத்து நின்னாலும் வழி அவதான்னு
வெளக்கஞ்சொல்லி வாழ்க்கை இன்னும் இருக்குன்னு
உறவெல்லாம் எடுத்துச் சொல்ல எல்லாரும்
ஒண்ணாச்சேந்து எங்கம்மைய கூப்பிட போனோம்..
எங்களப் பாத்ததும் வெடுக்குனு இழுத்து
முத்தமிட்டாலும் ஏனோ வலிக்கவே செஞ்சது..
மக்களால மனசொடிஞ்ச பெத்தவங்களும் இருக்காக..
பெத்தவங்களால பித்துபிடிச்ச பிஞ்சுகளும் இருக்காக..

அத்தனை கேள்விகளையும் அடக்கிகிட்டு ஒரேயொரு
பதிலைச் சொன்னேன் எங்கம்மையிடம்.."எந்தவொரு
சூழ்நிலையிலையும் உன்னமாதிரி நானிருக்க மாடேம்மா.."
சேர்த்து இழுத்தணைத்து அழவே முடிஞ்சது அவளால்..

Tuesday, September 16, 2008

தாமிரபரணி ஆற்றுப்பாலம்..

இன்றோ நாளையோஎன இறக்கும் தருவாயில் நான்..
இருந்தாலும் பரவாயில்லை என்று என்மேல்
நம்பிக்கையோடு நகர்ந்துசெல்வது சக்கரங்கலாயினும்
நடுக்கத்துடன் பயணிப்பது என்னவோ நல்லுயிர்கள்..

காரை பெயர்ந்து கைப்பிடி உடைந்து
குற்றுயிரும் குலைஉயிருமாய் இருந்த நான்,
கொஞ்ச நாளில் புறக்கணிக்கபடுவேன் என்று
களிப்புடன் இருக்கையில் என்
கிழிசல்களுக்கு தையலிட்ட மோசக்காரன் யாரோ?

தையல்கள் என் சுமைகளைத் தாங்குமா
தெரியவில்லை..அடுத்த தையலுக்குள் எனக்கொரு
அவப்பெயர் வாங்க விருப்பமில்லை ஆதலால்
ஆயுளை முடித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்..
அதற்குள் உருப்பெருமா அடுத்த பாலம்?

ஊர்களோடு உயிர்களையும் இணைக்கவே
உறவுப்பாழமை பூத்த நான்
உயிர்களைக் கொன்று உதிரும்முன்
உருவாகுமா எனக்கான மாற்றுப்பாலம்?

நான்கு பேராவாது மடிந்தால் தான்
நான் நிமிர்ந்து பார்ப்பேன் என்று
விழிகள் மூடும் அரசாங்கம்..
வேறென்ன இயலும் என்னால்??

இருக்கும்வரை இறைவனை வேண்டுவேன்
என்னுடைய மரணம் எனக்கானதாய் மட்டுமே
இருக்க வேண்டும் என்று..

Thursday, September 11, 2008

எங்கே என் தமிழன்??

இன்று என்னைப்
பெண் பார்க்கும் படலம்..

"பூச்சூடி பட்டுப்புடவை உடுத்தி
பத்துபவுன் நகை போட்டு
பெண்ணாய் பாந்தமாய் இரு"
- தாயின் கட்டளை..

"பெரியவர்களைப் பார்த்ததும் சின்ன
புன்னகையோடு இருகை கூப்பி
பணிவாய் விழுந்து நமஸ்கரி"
- தந்தையின் புத்திமதி..

"தனியாகப் பேசக் கூப்பிட்டால்
தண்ணி,தம் பழக்கமிருக்கா என்று
தத்துபித்துனு தயவுசெய்து உளறாதே"
- தமக்கையின் கெஞ்சல்..

மாடர்ன் உலகத்தில் இதெல்லாம்
முடியாதென்று மறுத்த என்னை
சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தார்கள்..

வண்டிச்சத்தம் கேட்டதும் அனைவரும்
வாசலுக்கு ஓடி வரவேற்க
வசதியான ஜன்னலுக்கு தாவினேன் நான்..

கடைசியாய் இறங்கினார் மாபிள்ளை..
கலைந்த தலையில் coloring..
கண்களில் cooling glass..
முகத்தில் மெல்லிய make-up..
முக்கியமாய் எதிர்பார்த்த மீசை missing..
சிவப்புத் தோலுக்கேற்ற shirt,jeans..

சிரிக்கவேண்டுமென்றால் காசு கேட்பேனென்று
வீட்டுக்குள் நுழைந்தவனை ஏனோ
விழியிலேயே நிறுத்திய மனது,
இதய வாசல்களை இறுக்க மூடி
இறைவனைக் கேட்டது - "எங்கே
இருக்கிறான் என் கறுப்புத்தமிழன் " என்று..

Wednesday, September 10, 2008

உன் வரவை நோக்கி..

ஓசைகளற்ற கடலாய் நான்
ஒருவாரம் உன்னைக் காணாமல்..

தினம் பார்த்தாலும் உன்
திருவாய் மலர்வதில்லை..எனினும் உன்
திருட்டுப்பார்வை தேடித் தவிக்கிறேன்..
திரும்பி எப்பொழுது வருவாய்??

Saturday, September 6, 2008

என் தவிப்பின் சாட்சி..

உன்னை பிரிந்த
என்னின் தவிப்பு
உனக்குத் தெரியாமலிருக்கலாம்..
ஆனால்..
காற்றாய் இருந்து
கண்ணீர் பட்டு காய்ந்துபோன
என் தலையணை சாட்சி..

உவமைகள் வேண்டாம்...

பூக்கள் எனப்பேசியே வாடிப்போனோம்
நிலா என்றெண்ணியே தேய்ந்துபோனோம்
சிலை எனச்சொல்லியே கல்லானோம்
நதி என்றழைத்து நாதியற்றுப்போனோம்

உள்ளக் கவலையுடன்
உவமைகளைப் படிக்கையில்
உவகை கொள்ள முடியவில்லை..

இவள் "இதுமாதிரி" என்றில்லாமல்
இவள் இவள்தானென்று இயல்பாய்
இயம்புகிற இதயம் பார்க்க ஆசை..
இருக்கிறானா அப்படியொரு கவிஞன்??

பெத்தவளுக்கு கேக்குதா என் புலம்பல்????

மஞ்சக்கயிறு கட்டிய மறுமாசமே
மருதைக்கு போறேன்னு பொய்சொல்லி
மலையேறிப்போன என் மச்சான்..

அஞ்சாறு வருசமாச்சு
அவன் கட்டிய கயிறும்
அழுக்கேறிப் போச்சு..

காட்டு வேலையில கருமாயப்பட்டு
ஒடம்பு வேர்வையோட ஒன்நெனப்பும்
கண்ணீரா கரைஞ்சு போச்சு..

வரவே மாட்டன்னு தெரிஞ்சாலும்
வயசுப்பொண்ணுக்கு வேலின்னு
வம்படியா தாலியக் கழட்ட
விடாத ஊரு சனம்..

ஒத்த வார்த்தை சொல்லிப் போயிருக்கலாம்
ஒன்ன எனக்குப் பிடிக்கலன்னு..
ஒண்டிக்கட்டையா ஊரோட மல்லுக்கட்டி
ஒரு ஆறுதலுக்கும் நாதியத்து
ஒடம்பும் மனசும் தேஞ்சதுதான் மிச்சம்..

ஒரேயோருதடவ ஊரும் ஒலகமும்
ஒனக்கிந்த கலியாணத்துல சம்மதமான்னு
கேட்டுருந்தா என்னைக்கோ இந்த
கேவலப்பட்ட பொழப்ப தடுத்துருக்கலாம்..

நேந்து விட்ட ஆட்டக்கூட
நெனச்சபடி வெட்டக் கூடாதுன்னு
தாரைதாரையா தண்ணிய ஊத்தி
தலை ஆடக்காத்திருக்கும் ஊரு,
தாலி கட்டிப் போறவளுக்கு
தண்ணிய மட்டும் தெளிச்சு விட்டது
தர்மமோ?? நாயமோ???

Tuesday, September 2, 2008

கடவுளின் கதறல்..

கல்லாகச் சமைந்ததாலையே
கரைய மாட்டேனென்ற
நினைப்பில் நீ நடத்திய
சடங்குகள் வெறும் சங்கடங்களே..
விதவிதமான அபிஷேகங்களில்
வழிந்தோடிய அமுதுகளை
விழியில் நீரோடு பார்த்து நிமிர,
ஒட்டிய வயிற்றுடன்
ஒருவேளை உணவுக்காக
ஏங்கிய என் குழந்தை
எரிச்சலோடு என்னைப்பார்க்க,
இப்படியொரு இம்சையான பிறவி
எடுக்காமல் இருந்துருக்கலாம் நான்!
வாழ்வதற்காக நான் படைத்த என் மக்கள்
வாழ்வைத் தொலைத்து வீதியில் வழிதவறி
அடிப்படைத் தேவைக்கே அல்லல் பட,
எனைக் காப்பதாய் நினைத்து நீ
கடிவாலமிட்டுச் சென்ற கட்டிடத்திற்குள்
கதறிக் கொண்டிருக்கிறேன் நான்..
நாளைய விடியலை நடுக்கத்துடன் எதிர்நோக்கியிருக்க
நான் பார்த்த காட்சிக்கு
நன்றி உரைக்கிறேன் உனக்கு..
இரு விழிகளை இழந்த
இளம் குருத்தொன்று இன்னிசை பாடி யாசிக்க
எதிர் கடையிலிருந்து வந்த
இசுலாமியன் இதமாய்த் தடவி, இட்டான் பிச்சை!
எனக்கு புரிந்தது..
எல்லாரும் என்னை நம்பி வரவில்லை..
எஞ்சியிருக்கும் உன் மனிதநேயத்தை மட்டுமே என்று..
சிறிது நேர அடைக்கலமும்
சிறிது நேர பிச்சையும்
இயலாதவனுக்கும் இசைகிறது என்றால்..
என்றும் சிறைபட்டிருக்க
எனக்கு முழுச் சம்மதமே...

என் காயத்துக்கு மருந்து..

வேகாத வெயில்ல தண்ணிஎடுக்க போகையில
வேப்பமரத்தடியில வெகுநேரமா காத்துநின்னு
வெள்ளரிப்பிஞ்சு கொடுத்தியே நெனவிருக்கா?

பத்துநாளா காணோமின்னு பரிதவிச்சு போயி
பம்பு வாங்கற சாக்குல என்னப்
பாசமாப் பாக்க வந்தியே நெனவிருக்கா?

களத்துமேட்டுக்கு கஞ்சி கொண்டு போகையில
கம்மாயில வழிமறிச்சு கையில காயிதங்குடுத்து
காதலிக்கறேன்னு சொன்னியே நெனவிருக்கா?

சீமைக்கு போறன்னதும் சின்னபுள்ளையா அழ
சிவபெருமான் சாட்சியா குங்குமங்கொடுத்து
சீக்கிரமே வந்துருவேன்னு சிரிக்கவச்சியே நெனவிருக்கா?

ஆறுமாசங்கழிச்சு அய்யனாரு கோயில்ல
ஆத்தாவுக்கு கட்டுப்பட்டு அடுத்தவள கட்டப்போறன்னு
அழுத எனக்கு ஆறுதல் சொன்னியே, நெனவிருக்கா?

நெனச்சபடி இருந்த நேரங்கலஎல்லாம்
நெனக்கவே கூடாதுன்னு நெனச்சாலும்
நெனவுகளச் சுமந்த காத்தும் ஊரும்
நெறைய கதை பேசுது...

ஆம்பள உன் கண்தொடைக்க ஆயிரந்துணையிருக்கு
சிறுக்கி எஞ்சோகத்துக்கு சொகமா
உன்நெனப்ப தவிர வேறென்ன இருக்கு?????

என் அம்மா..

சிரட்டையில் சமைக்கிறேனென்று
சிறுதீயில் வைக்கொல்போரைப் பொசுக்க
சினத்தில் மிளகாயை அரைத்து
சிறுகண்ணில் ஒற்றவந்த அன்னையைப்பார்த்து
செய்வதறியாது நின்ற என்னை
செல்லமாய் அணைத்துக் காத்த
என் தாத்தன்....

கண்ணாமூச்சி விளையடுகிறேனென்று
களத்திலிருந்த நெற்பானைக்குள் நுழைந்து
கண்ணயர்ந்த என்னைத் தேடி
கம்போடு அடிக்க வந்த அம்மாவை
குழந்தையென்றால் அப்படித்தான் என்று
கொஞ்சியபடி எனைத் தூக்கிய
என் தாத்தி..

மிதிவண்டி பழகுகிறேன் என்று
முழங்கையை முறித்து மனைவந்தவளை
முற்றத்திலேயே முடியைப்பற்றிய தாயிடமிருந்து
மின்னலாய் மருத்துவமனைக்கு மீட்டுச்சென்று
மடியிலேயே வைத்திருந்து தன்கண்ணீரோடு
மகளின் கண்ணீரையும் துடைத்த
என் தந்தை..

இளையவனுக்கு கற்பிக்கிறேன் என்று
இதுதான் சாக்கென்று தலையில் குட்ட
இருவரும் போட்ட சண்டையில்
இரண்டு லிட்டர் எண்ணைகேன் கவிழ
ஈர்க்குமாரோடு இடிஇறக்க வந்த அம்மாவிடமிருந்து
இரண்டடி வாங்கினாலும் என்னை இழுத்துக்கொண்டு ஓடிய
என் தம்பி...

அனைவரும் பார்த்துப்பார்த்து
அன்பை பொழிய
பெற்றவளுக்கு என்மேல்
பாசமே இல்லையோஎன
புலம்பி இருக்கிறேன் பலமுறை..
நெடுநாளைக்குப்பின்..
நட்பு பாவிக்கிறேன் என்று
நண்பனை பற்றி நல்விதமாய் பேச
நம்பாமல் நிமிர்ந்த நால்வரையும் பார்த்து
நான் அவசியமில்லாமல் அளக்கிறேன் என்றுணர்வதற்குள்
நான் வளர்த்த பெண் அப்படியில்லைஎன்று
நம்பிக்கையை பாசமாய்த் தந்தவளுக்கு
நன்றிக்கடனாய் அவள் நம்பிக்கையை காப்பாற்றுகிறேன்..