Tuesday, March 30, 2010

ஊறல்பூச்சிகள்

நெரிசலில்லாத
பேருந்தில்
நெருக்கபடுகிறாள்..

பின்புறம் படருகிறான்
இருபதுகளில் ஒருவன்...

பக்கவாட்டில் சாய்கிறான்
நாற்பதுகளில் ஒருவன்..

திடுமென அழுத்தப்படும்
பிரேக்குகளில்
திடுக்கிட்டு மன்னிப்பு
கோருகிறாள் -சுற்றியூரும்
ஊறல்பூச்சிகளிடம்..

Monday, March 29, 2010

ஊடலின் மௌன வலிகள்..

அறையின் ஓரமாய்
கதறித் திரிகின்றன
அவள்
கூந்தல் இறங்கிய
கற்றைகள் சில...

சுவரோரங்களில்
தேம்புகின்றன
அவள்
சுவாசம் படர்ந்த
ஒட்டடைகள் சில..

எதிர்பார்ப்புகள் தேக்கி
காத்திருக்கின்றன
அவள்
வாய்மொழி கேட்ட
சுவர்க்கோழிகள் சில..

அவளோ
மௌனத்தைப்
போர்த்திக்கொள்கிறாள்
இன்றும்..

நீண்டுகொண்டிருக்கும்
இரவின் - அடர்ந்த
மௌனத்தின் வலியில்
புலம்பித் தீர்க்கின்றன
பூச்சுக்கள் உதிர்ந்த
செங்கல்கள் சிலவும்,
விருப்பங்கள் காய்ந்த
செல்கள் பலவும்..

Saturday, March 27, 2010

அலைபேசி..

தெரியாமல் உதிரும்
குறுஞ்செய்திகளில்
மொட்டுவிடுகிறது நட்பொன்று..

தெரிந்தே தவறவிடும்
அழைப்புகளில்
பூக்கிறது காதலொன்று..

நெடுநாளைய தேடலின்
குரல்களில் கரைகிறது
கண்ணீர்த்துளியொன்று..

அடுத்தவரின் அந்தரங்க
பதிப்புகளில்
துளிர்க்கிறது வன்மமொன்று..

கழுத்து சாய்ந்தவொரு
பயணத்தில்
நிகழ்கிறது மரணமொன்று..

மனித உணர்வுகளை
உள்ளங்கைக்குள்
வைத்தாடுகிறது - உயிரற்ற
கையடக்கப் பெட்டியொன்று..

(தலைப்பிட்டு கவிதை எழுதும் சிறுபோட்டிக்காக எழுதியது.. )

Wednesday, March 17, 2010

நண்பகலொன்றில்..

விரல்களின்
செந்நிற அச்சுப்பதிந்த
கன்னங்களுக்கிடையிலும்
கொஞ்சமாய்
வழிந்திருந்த உமிழ்நீரின்
பிசுபிசுப்புக்கிடையிலும்
தொடர்ந்திருந்த
நினைவுப்பின்னல்கள்
நிறமிழக்கின்றன,
காதோரமாய் நகருமொரு
எறும்பின் தேடலில்.

Tuesday, March 16, 2010

வாழ்த்தொன்று பெறுங்கள்

வெம்மையின்
பார்வையொன்றில்,
காய்ந்திருக்ககூடும்
தெருவோர நீர்த்தேக்கமொன்று..

பிளவுபடும்
நிலத்தினிடையில்,
வற்றியிருக்கக்கூடும்
ஊரைக்கடந்த குளமொன்று..

மழைகாணாத
வருத்தத்தில்,
கீழிறங்கியிருக்கக்கூடும்
கிணறொன்றின் கொள்ளளவு..

தாகம் தீர்க்கும் வழியற்று
ஏமாறக்கூடும்..
கூண்டற்ற பறவைகளும்,
வீடற்ற விலங்குகளும்..

நீர்மொண்டு வையுங்கள்
மொட்டைமாடியிலும்,
முற்றத்தின் ஓரத்திலும்..

இயற்கையின்
விதியொன்றிற்கு,
வாழ்வெழுதி
வாழ்த்தொன்று பெறுங்கள்..

[Src: Fwd Mail.. ;) ]

Monday, March 15, 2010

விம்மும் திண்ணை..

சாரைகளுக்கும்
விரியன்களுக்குமான
நகரப்பாதையொன்று
அடைபடுகிறது..

நாகத்தகடு அம்மனுக்கும்,
வெற்றிலை குதப்பும்
குடுகுடுப்பைக்காரனுக்கும்
வேலியெழும்புகிறது..

கண்ணாமூச்சியாடும்
குழந்தைக்கும்,
காதல் கொணரும் தென்றலுக்கும்
கதவுகள் போடப்படுகிறது..

வீட்டைச் சுற்றியுயரும்
சுவர்களின் மறைவில்,
விசாரிப்புகளேதுமின்றி
விம்முகிறது திண்ணையொன்று ..

Friday, March 12, 2010

துரை யாதவா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ல கொஞ்ச நாள் குப்பை கொட்டிட்டு, சென்னை அண்ணா யுனிவெர்சிட்டில கணினி பொறியியலில் ஒரு சீட்டு வாங்கி(சீட்டு வாங்க தான் அங்க கால் வைக்க முடிஞ்சுது) ராமநாதபுரம் போய் சேர்ந்தேன்.கல்லூரியில் சேர்ந்த புதிதில் உடல்,பொருள்,ஆவி அனைத்திலும் பயம் நிரம்பி வழிந்தது.கழுத்து ,வகுப்பறை கரும்பலகை தவிர்த்து வேறெங்கும் திரும்பாது.முதல் வருடத்தில் அனைத்து பொறியியல் பாட பிரிவு மாணவர்களும் கலந்து தான் இருப்பார்கள்.அதனால் பிரிவிற்கேற்ப காகித கப்பல்,காகித ஏரோப்ளேன், காகித கேமரா என்று அவ்வப்பொழுது பறந்து வரும்.

நான் அத்தனை பசங்கள மொத்தமாய் அதற்குமுன் பார்த்ததில்லை. வகுப்பறைக்குள் நுழையுமுன் நிமிர்ந்து பார்த்தால் தலை சுத்தும்.அத்தனை மாணவர்கள்.தொண்ணூறு மாணவர்கள்.பதினாறு மாணவிகள்.முதல் பெஞ்ஜில் சுவரோரமாய் எனது இருக்கை.எனக்கு அடுத்த பெஞ்சில் சில மாணவிகள்.அதை தவிர்த்து அத்தனை இடங்களையும் பசங்க தான் ஆக்கிரமித்திருந்தார்கள்.

முதல் வருடம் எல்லா பாட பிரிவுகளையும் படிக்க வேண்டும்.ஆங்கிலம், பிசிக்ஸ்,கெமிஸ்ட்ரி,மேத்ஸ்,மெக்,சிவில்,எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்,கம்ப்யூட்டர் என எல்லாமும் படிக்க வேண்டும்.அவ்ளோ பெரிய பெரிய புத்தகங்கள்,பெரிய பெரிய ஆசிரியர்கள்(அதான் பேராசியர்கள்..),நுனி நாக்கு ஆங்கில மாணவர்கள் என எல்லாருமே பயமுறுத்தினார்கள்.

முதல் வருடம் என்பதால்,வகுப்பெடுக்க வருவோர் போவோர் எல்லாம் பேர், ஊர் கேட்டார்கள்.இதில் எழுந்து வேற பதில் சொல்லணும்.முதல் வருடம் முழுதும் எழும்பி நிற்கவே கூச்சமாய் இருக்கும்.மற்றும் எனக்கு என் பெயரை உச்சரிக்க பிடிக்காது."ர"வை உச்சரிப்பதில் பிரச்சனை.தயங்கி தயங்கி தான் சொல்வேன்.பேர் கூட பிரச்சனை இல்லை.ஊர் ரொம்ப பிரச்சனையாக இருந்தது.முதலில், "சங்கனாபேரி" என்றேன். பேராசிரியர்கள் புருவத்தை தூக்கினார்கள்.பின், "தென்காசி" என்றேன்.சிலர் சிரித்தார்கள் சிலர் மறுபடியும் புருவத்தை தூக்கினார்கள். பின், "திருநெல்வேலி" நிரந்தரம் ஆனது. யார் கேட்டாலும் திருநெல்வேலி தான்.
இதில் ஒரு சந்தோஷம் என்னவென்றால், திருநெல்வேலி என்றபின் யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள்.

பின்னொரு வகுப்பில், மோட்டாவான பேராசிரியர் ஒருத்தர் வந்தார். ஆள் அமிதாப் மாதிரி நல்ல உயரம்.மன்சூர் அலிகான் மாதிரி உடல். நிறம் அக்மார்க் தமிழன் நிறம். அரிவாள் இல்லாத அய்யனார்.இவரை மாதிரியே பள்ளியில் கணக்கு ஆசிரியர் இருந்ததால் முதலில் அவ்வளவு பயம் இல்லை. பின் பேச ஆரம்பித்தார். கெட்ட வார்த்தைகள் கொட்டினார்.வகுப்பறை, மாணவிகள் அதெல்லாம் அவருக்கு தெரியவில்லை. மனதில் பட்டதையெல்லாம் பேசினார், ஒரு ரவுடி மாதிரி. "எனக்கு நண்பனா தோளில் கைபோடவும் தெரியும், எதிரினு தோணுச்சுனா கைபோட்டுட்டு இருக்கும்போதே கழுத்தை நெறிக்கவும் தெரியும்" அப்படின்னு லெக்சர் கொடுத்தார். அதுவரை ஆட்டம் போடும் வகுப்பறை, இவரது வகுப்பில் அமைதியாய் இருந்தது.

அறிமுகப்படுத்திக்கொள்ளுமாறு ஆரம்பித்தார். நான் வழக்கம் போல திருநெல்வேலி என்றேன்."திருநெல்வேலில இருந்து எத்தனை கிலோமீட்டர்?" என்றார். நான் முழித்தேன். 'மொச பிடிக்கற மூஞ்சிய பாத்தா தெரியாது?' என்று அவர் நினைப்பதாய் பட்டது.
"நூறு கிலோமீட்டர் இருக்கும்" என்று உண்மையை சொன்னேன்.
"நூறு மீட்டர் தள்ளி இருந்துட்டு திருநெல்வேலின்னு சொன்னா திருநெல்வேலி உங்க ஊர் ஆகிடுமா?" என்றார்.
நிக்க வச்சு இப்படி பேசராறேனு அழுகை வந்தது. 'சொந்த ஊற சொன்னாலும் தெரிலங்கறாங்க.. பக்கத்து ஊற சொன்னாலும் தெரிலங்கறாங்க.. மாவட்டம் சொன்னா திட்டறாங்க'னு நெனச்சுட்டு பொய் சொல்ல தீர்மானித்தேன்.
"தென்காசி" என்றேன்.
"தென்காசிதானா?? இல்ல அதுல இருந்து பத்து கிலோமீட்டரா? "
'என்னடா இது வம்பா போச்சு.. எதோ தெரிஞ்சவர் மாதிரியே பேசறாரே.. பொய் சொல்லிட்டோம்.. அதையே காப்பாத்துவோம்'னு, "ஆ..ஆமா" என்றேன்..
"தென்காசின்னு சொன்னா எங்களுக்கு தெரியாதாக்கும்? உக்காரு", என்றார்.
மொத்த வகுப்பிற்கு முன்னை இப்படி கத்தறாரேனு கஷ்டமா இருந்தது. தலையை தொங்கபோட்டுட்டு உக்கார்ந்தேன். எல்லாரும் பேர் சொல்லி முடித்ததும், தொண்டையை கனைத்து அவரை அறிமுகம் செய்து கொண்டார்.

"கணேசன், கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட்"..

'ஆகா..வச்சுட்டாங்களே ஆப்பு.. இவரோட இன்னும் நாலு வருஷம் மல்லுக்கட்டனுமா????'
புளியங்குடி கண்ணாவில் பன்னிரண்டு முடித்து ரிசல்ட் வந்த நேரம். என்னோட மதிப்பெண் 1074. வீட்டில் யாருக்கும் திருப்தி இல்லை. புத்தகமும் கையுமாக எப்பவும் இருந்ததால் மாநிலத்தில் முதலாவதாய் வருவேன்(என்ன கொடுமை சார் இது? :P ) என்று நினைக்காவிட்டாலும் ஓரளவு நல்ல மதிப்பெண் வாங்குவேன், அரசு பொறியியல் கல்லூரியில் சேருவேன் என்று நினைத்தார்கள்.கட் ஆப் 261 தான் வந்தது. அம்மா திட்டினாள். அப்பா அமைதியாய் இருந்தார். :)

என் மதிப்பெண்ணிற்கு கவுன்சிலிங் லேட்டா தான் வரும். அதுவரை சும்மா இருக்கவேண்டாம் என்று மதுரை யாதவா கல்லூரியில் மேத்ஸில் சேர்த்து விட்டார்கள்.அப்பொழுது பெரியப்பா ஆண்கள் கல்லூரியில் முதல்வர். நான் பெண்கள் கல்லூரியில் சேர்ந்தேன். கூடவே என் தூரத்து பெரியப்பா பெண்ணும்.என்னை சேர்த்துவிட அப்பா கூட வந்தார். வந்து அட்மிசன் போட்டு வெளியில் நின்றிருந்த போது, என் அருமைத்தம்பி பள்ளிக்கு போகாமல் பேருந்தேறி விசாரித்து பின்னாடியே வந்து சேர்ந்தான். அவ்ளோ பாசம். :P

என் அக்கா அங்கு கடைசி வருடம் B.B.A படித்துக்கொண்டிருந்தாள்.மற்றும் இரு சொந்தக்கார அக்காக்களும் அங்கு படித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாரும் ஒன்றாய் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.நான் சற்று தள்ளிநின்று வேடிக்கை பாத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது எங்களைக் கடந்து சென்ற அனைவரும், என்னைக் கை காட்டி எதோ பேசியபடி சென்றனர். நான் பொதுவாய் சிரித்து வைத்தேன்.

என்னையும், என் தூரத்து பெரியப்பா பெண்ணையும், இரு தூரத்து சகோதரிகளின் வெவ்வேறு அறைகளில் ஆளுக்கு ஒருத்தருடன் தங்கவைக்கப்பட்டோம். ரேக்கிங் இருக்குமென்பதால் நான் வெளியில் செல்லவில்லை.மாறாய் அன்றிரவு ஒவ்வொருத்தராய் வந்து விசாரித்தார்கள். என் அக்காவின் பெயரை சொல்லி, "இவ அவங்க தங்கையாமே?" என்றார்கள். சிரித்துக்கொண்டேன். 'பரவால்லையே.. அக்காவிற்கு நல்ல மதிப்பு இருக்கிறதே' என்று நினைத்துக்கொண்டேன். "எங்க ரூமிற்கு அழைத்து செல்லலாமா?" , என்று கேட்டார்கள். என் தூரத்து அக்கா சம்மதிக்கவில்லை. பின், என்னிடம் வந்து காதில் கிசுகிசுத்தார்கள். "நம்ம அக்கா தான் இங்கு ரேக்கிங்ல பர்ஸ்ட். இப்போ கூட ஒரு கம்ப்ளெயின்ட் இருக்கு அவங்க மேல. அதான் இணைக்கு எல்லாரும் உனக்காக காத்துட்டு இருக்காங்க பலி தீர்த்துக்க.. அவங்கள பண்ணதெல்லாம் உன்ன பண்ண சொல்வாங்க.. அதான் உன்ன தனியா அனுப்பல" என்றார். பக்குன்னு ஆகிடுச்சு. 'அடப்பாவமே.. மொத்த விடுதியும் இப்படி கொலைவெறியோட இருக்கே? கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும் போல' என்று நினைத்துக்கொண்டேன்.

"நைட் யாராவது கதவை தட்டினா என்ன செய்வ?" - அந்த அக்கா கேட்டார்கள்.
"போய் திறப்பேன்"
"அப்படிலாம் பண்ணிடாத.. திறக்கவே செய்யாத.. கடைசி ரூம்ல ஒரு பொண்ணு அமாவாசை, பௌர்ணமி அன்னைக்கு நடு ராத்திரி வந்து எழுப்புவா. பாத்ரூம் கூட்டிட்டு போவா துணைக்கு வர சொல்லி.. அங்க போய் ஷவர்ல நின்னு தலைக்கு குளிப்பா"
' இது வேறயா..என்ன நடக்குதுனே புரில..' -னு நெனச்சுட்டு, "சரிக்கா " னு சொல்லிட்டு அன்னைக்கு அமாவாசை, பௌர்ணமி எதாவது இருக்கானு காலேண்டர் பார்த்தேன்.

சாப்பிட்டு மேலே வந்ததும், என் அக்கா அறையில் என்னை வரச்சொல்லி சேதி வந்திருந்தது. நானும், என்னுடன் புதிதாய் சேர்ந்த இன்னொரு பெண்ணும் போனோம்.உள்ளே போனதும் அக்கா உக்கார சொன்னா. உக்கார்ந்தோம். அக்காவின் தோழி, அக்காவிடம் கேலியாய் அனுமதி கேட்டார்கள் எங்களை ரேக்கிங் செய்ய.

அக்கா தாரளமாய் பண்ணிக்கோங்க என்று பெருந்தன்மையாய் சொல்லிவிட்டாள். ஏதேதோ செய்ய சொன்னார்கள். என் முகம் இறுகி இருந்தது. விட்டால் அழும் நிலையில்.ஒரு பாட்டாவது பாடு என்றார்கள். சுற்றி கொஞ்சம் கூட்டம். அப்போதும் அமைதியாய் இருந்தேன். "உன் தங்கை உன்ன மாதிரி இல்ல"னு சொல்லிட்டு, "சரி, இந்த பொண்ண எங்க ரூம்ல போட்டுருக்காங்க.. புதுப்பொண்ணு.. தினம் காலேஜ் போகும்போது வந்து கூட்டிட்டு போ" என்றார்கள். மண்டைய ஆட்டிவிட்டு விட்டால் போதும் என்று ஓடி வந்துவிட்டோம்.

பின், தினமும் அந்த புதுப்பொண்ண எங்களுடன் கூட்டி செல்வோம்.ஒரு வாரம் கழித்து தான் தெரியும், அந்த பொண்ணு பழைய பொண்ணுன்னு. கடைசி வருட மாணவி தான் என்று.
அப்பாடா, நம்மள வேற ஏதும் பண்ணலன்னு நிம்மதியாய் இருந்தது.

ந்த விடுதி கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும். சாப்பாடு நேரமோ, தேநீர் அருந்தும் நேரமோ, மூன்று மணி அடிப்பார்கள். முதல் மணி முதலாம் வருட மாணவிகளுக்கு. இரண்டாம் மணி இரண்டாம் வருடத்திற்கு, மூன்றாம் மணி மூன்றாம் வருடத்திற்கு.
சாப்பிடுவதற்கு முன் சாமி பாடல் பாட வேண்டும். "கற்பூர நாயகியே"னு எதாவது ஒரு பாடல். தேசிய கீதம் சில இடத்துல தான் பாடணும்னு சொல்ற மாதிரி இந்த மாதிரி பாட்டெல்லாம் கோயில்ல தான் பாடணும்னு நெனச்சிருந்தேன். அப்புறம் எங்கயும் பாடலாம்னு நெனச்சுக்கிட்டேன். பரிமாறும் பொறுப்பு வாரம் ஒரு அறை. காலை, மதியம், இரவு என்று ஒரு அறை மாணவிகள் தான் பரிமாற வேண்டும். ஸெல்ப் செர்விஸ்லாம் கிடையாது. ஆனா நல்ல என்ஜாய்மென்ட் இருக்கும். அப்புறம் சாப்பாட கொஞ்சம் கூட கொட்டக்கூடாது. அதை கண்காணிக்க ஒரு வார்டன் தட்டு கழுவும் இடத்தில் நிற்பார்கள். சாப்பாடு நேரம் முடியும் வரை உக்கர்ந்திருந்தால் திட்டிவிட்டு அனுப்புவார்கள்.

காலேஜ்லயும் பிரேயர் உண்டு. எல்லாம் சாமி பாட்டுதான். ஒரு ஐந்து ஆறு பாட்டு பாடுவார்கள். எனக்கு இந்த பாட்டெல்லாம் தெரியாது.பாடினதே இல்லை. நோட்டில் எழுதி வைத்து பிரேயர்ல பாடவேண்டும்.

ரு விடுமுறை நாளில், சாயங்காலம் மொட்டை மாடியில் எல்லாரும் வடகம் பிழிந்து கொண்டிருந்தார்கள். வீட்டில் அதற்கு முன் ஒரு சாமானை நகர்த்தியது இல்லை. ஆனால் இங்கே தோழிகளோடு வேலை செய்ய பிடித்திருந்தது.வித்தியாசமாய் இருந்தது. வடகம் பிழிந்து கொண்டிருக்கையில் என் அக்காவின் பக்கத்து அறை சீனியர் என்னை ரேக்கிங் செய்ய அழுதபடி அக்காவிடம் ஓடிவந்து கம்ப்ளைன்ட் செஞ்சேன்.சரி நான் பாத்துக்கறேன்னு சொல்லி அனுப்பிவச்சா.

நல்லவேளையாக பொறியியல் கவுன்செலிங் வர, முதல்முறையாக சென்னை பயணம்.நான் அமர்ந்திருந்த இருக்கையின் கண்ணாடி ஜன்னலில் "சதக்" என்று எழுதி இருந்தது கொஞ்சம் பயமாய் இருந்தது.பொறியியல் சீட் தேர்வு செய்யும் போதுதான் சதக் என்பது பேர் என்று தெரிந்தது.ஆம், சதக்கில் தான் பொறியியல் சீட் கிடைத்தது. எந்த சந்தோசமோ, துக்கமோ இல்லாத ஒரு உணர்வு.மதுரையை காலி பண்ணி வீட்டில் உக்கார்ந்திருந்தேன் நான்கு வருட வனவாசத்தை எதிர்நோக்கி..

இனி.. சதக்கில் நானும்...

Saturday, March 6, 2010

தனிமை பழகு..2

தனிமை நிறைந்த
ஞாயிறொன்றில்
எழுந்தது முதல்
எல்லாமே
கவிதையாய்த் தோன்றியது..

விடுதலையற்ற தொட்டிமீன்கள்
துள்ளி
விளையாடிக்கொண்டிருந்தன..

சுவரோர ஒட்டடைகளினூடே
நம்பிக்கை யிழக்காத
பூச்சிகள் தவமிருந்தன..

வெறுமை படர்ந்திருந்த
நாற்காலியில் - அன்று
காற்று நிரம்பியிருந்தது..

நீர்த்துப் போன
நினைவுகளில்,
நிரம்பிவழிந்த தொட்டிநீர்
நரம்புகளைத் தட்டியெழுப்பியது..

சாமரம் வீசி
சமாதானம் செய்தன,
கொடியிலசையும் சேலைகள்..

சாரமற்ற வாழ்வில்
சுவையைக் கூட்டியது
சமையல் வாசனை..

வழிந்தோடிய இசை
வீடெங்கும் பரவி
வெறுமையைச் சுத்திகரித்தன..

தீண்டப்படாத காகிதம்
கவிதையின் நிழற்பட்டு
புன்னகையை பரிசளித்தது..

பின்னிரவில்
தூக்கம் கலைந்து
காகிதம் பார்த்தேன்..

என்னைப் பற்றிய
வார்த்தைகள் மட்டும்
விடுபட்டுப் போனதாய்
வருத்தம் தெரிவித்தது காகிதம்..

விரக்தி புன்னகையில்
விடிந்திருந்தது திங்கள்..

இயல்பிற்கு காத்திருக்கிறான் கடவுள்

நீண்டு,
பின்னும் நீளும்
பெரியதொரு வரிசையில்
வியர்த்துக் கசங்கும்
சதைகளுக்கிடையில்
பயபக்தியுடனான காத்திருப்புகள்…

வியர்த்திருந்த
அவ்வரிசையோடு
சலித்துத் தேங்கியிருந்த
அமைதியையும்
குலைத்தவாறு குழந்தைகள்..

அக்குழந்தைகள்,
காத்திருப்பின் கசகசப்பில்
நம்பிக்கை பூச்செடிகளை
நட்டுச் சென்றார்கள்…

கடவுளறியாத கவலையோ
ஆன்மிகம் புரியாத
அழற்சியோ அற்றிருந்தார்கள்..

அலங்காரம் முடிந்தவொரு
அறிவிப்பில்
கருவறை சூழ்ந்திருந்த
வெண்திரை விலகியது..

சிலிர்த்தெழுந்த கூட்டம்
கன்னத்திலிட்டு
கோரிக்கைகள் ஒப்பித்தது..

காட்சியளித்த சிலையில்
கடவுளைக் காணவில்லை..

அவன்,
நீண்ட நேரமாய்
விளையாடிக்கொண்டிருக்கிறான்
இயல்பாயிருந்த பிஞ்சுகளோடு
மிக இயல்பாய்..

வரிசையில் வியர்த்திருந்த
வாடிய முகங்கள்
இல்லாத கடவுளிடம்
பக்தியை பரிசளித்துச்சென்றன..

கரைந்திருந்த கூட்டம்
விட்டுச்சென்ற தனிமையில்,
காத்திருக்கிறான் கடவுள்..
மற்றுமொரு
சிலையலங்காரத்திற்கு..

காணாமற் போன கவிதை..

எழுதத் தொடங்கி
நடுவில் நிறுத்தியிருந்த
கவிதையொன்றை
காணவில்லை..

பத்திரப்படுத்தியிருந்த
இடம்
புலப்படவேயில்லை…

மழையின்
கடைசித்துளி போலவும்
வெயிலின்
கடைசிக்கதிர் போலவும்
நினைவிலகப்படவில்லை..

ஒருவேளை,
தலையணையின்
பின் படர்ந்து
பின்னெழும்
நீண்ட கனவில்
மெதுவாய்ப் புலப்படலாம்..

இதுவும் கடந்து போகும்..

எழுச்சிமிக்க
கவிதையொன்றின்
காரணிகள்,
சிறுமூளையின்
மூலம் தொட்டுணர்ந்து
முடங்கிப் போயிருந்தன..

பின்னாளில்
எழுதிக் களைத்த
கிறுக்கலின் போதும்
பேசித் தீர்த்த
வார்த்தைகளின் போதும்
கொஞ்சமாய் எட்டிப்பார்த்து
கண்ணடித்துக் கொண்டன..

காரணிகளுக்கான
காட்சிகள் கண்டபோது
சிறிது துளிர்த்துக்கொண்டன..

முதலாய் வந்த முறுக்கலிலும்
பின்னெழுந்த சிலிர்ப்பிலும்
உயிர்துக் கொண்டன..

செயல்படும் திசையற்று
எழும்பிவந்த இயலாமையில் - அவை
மரணித்துப் போயிருந்தன..

ரத்தம் குடிக்கும் கொசுக்கள்

தெரிந்தே அனுமதித்தேன்
இரத்தம் குடிக்கும்
கொசுவொன்றை – என்
கால்மீதமவர்தற்கு...

சிறிது மணித்துளிகள்
சிரமமேதுமில்லை..
பின் மெதுவாய்
ஊசியை உள்ளிறக்கியது..

வலித்தாலும்
சிறிது பொறுத்திருந்தேன்..

இன்னும் ஆழமாய்
இறங்க
தாளாத வலியில்
தட்டிவிட்டேன்..

இறக்கைகள் பிய்ந்து
இறந்து கிடந்தது..
தட்டிவிட்ட விரலோரம்
தேங்கியிருந்தது இரத்தம்..

உற்று நோக்கிய
குருதியில் –என் துளி
எதுவென்று தெரியவில்லை..
கருஞ்சிவப்பாய்,
உரிஞ்சப்பட்ட ஒட்டுமொத்த
உழைப்புகளின் சாட்சியாய்..

இதைப்போலவே
அரசாங்க கொசுக்களும்
அரசியல்வாதி கொசுக்களும்
என் கால்களிலும்
உன் கைகளிலும்
அவன் முகத்திலும்…

மனிதனும் கவிதைகளும்..

அனுவின் நுட்பத்திலிருந்து
அண்டத்தின் எல்லைவரை
கொட்டிக்கிடக்கின்றன கவிதைகள்..

அசையும் பொருள்களிடத்தும்
அசையாத உயிர்களிடத்தும்
அவை ஒளிந்திருக்கின்றன..

புலனடக்காத மனிதனுக்கு
காண்பவையெல்லம் கவிதைகள்..
புலனடக்கிய ஞானிக்கு
கவிதையெல்லாம் கற்பனைகள்..

கற்பை யழிக்கும்
கவிஞனிடத்தில் கைதியாகவும்
புனிதம் பிரசவிக்கும்
புலவனிடம் காதலியாகவும்
அவை ஆளப்படுகின்றன..

உருக் கொடுக்கப்பட்ட
கவிதைகளுக்கு – சிலரால்
வாழ்த்து தூவப்படுகிறது..
மற்றும் பலரால்
வாய்க்கரிசி திணிக்கப்படுகிறது..

இப்படியாக
மனிதனும் கவிதைகளும்..

வீரம்..

வேடிக்கை பார்த்த
அநீதியொன்றின்
நிகழ்வில்,
நன்பனது சினிமாவிற்கும்,
எனது கதைகளுக்கும்
வீரம் சேமித்துக்கொண்டேன்..

ஊடல்..

உன்னிடம் சண்டையிட
ஓராயிரம்
காரணங்கள்
சேர்த்து வைத்திருக்கிறேன்..

உன் புன்னகையில்
தொலைந்துவிடக் கூடுமென்று
பொத்தி வைத்திருக்கிறேன்..

பிந்தொடருமுன் கொஞ்சலில்
காய்ந்து விடுமென்று
காவல் இருக்கிறேன்..

சலித்துக் காட்டுமுன்
பொய்க் கோபத்தில்
காரணங்களின்றி – அவை
உதிர்ந்துவிடுமெனத் தெரிந்தும்
சண்டையிடக் காத்திருக்கிறேன்..

காத்திருக்கும் கவிதைகள்..

உனக்காகத்தான்
காத்திருக்கிறோம்
நானுமென் கவிதைகளும்…

காத்திருப்பின் நீளம்
நீண்டபோதும்
இன்னும் களைப்படையாமல்…

என்னைப் போலவே
என் கவிதைகளுக்கும்
நிறைய எதிர்பார்ப்புகள்..

உன் காதலை
எதிர்நோக்கி நான்..
அதன் வார்ப்புகள்
எதிர்நோக்கியென் கவிதைகள்..

எப்போதென்
காகிதம் வருகிறாய்
கவிதையாய்ப் படர..?

தூறல் தொடங்குமொரு பொழுதில்..

தூறல் தொடங்குமொரு
குளிர்ந்த பொழுதில்
காய்ச்சலென்று
கண்கள் சொருகுகிறாய்…

முன் நெற்றியிலொட்டிய
பத்தைப் பிரித்தென்
கைகள் பதித்துக்கொள்கிறாய்..

சிறிதுநேர கதகதப்பில்
சூடிறங்கியதாய்
இமைகள் பிரிக்கிறாய்…

தூறல் தொடங்குமொரு
குளிர்ந்த பொழுதில்
காய்ச்சலென்று
கண்கள் சொருகுகிறேன்
நான்…