Monday, June 20, 2011

மொழி மறந்த கவிதை..

கவிதைகள் சரணடைகின்றன
அவளது ஒற்றைக்குடுமியிலும்
நெற்றி படர்ந்த முடிகளிலும்..

கவிதைகள் உயிர்த்தெழுகின்றன
அவளது கருவிழிகளிலும்
மெல்லிய உதட்டுச் சுழிப்பிலும்..

உயிர்த்தெழுந்த கவிதைகள்
மீண்டும் சரணடைகின்றன
அவளது கன்னங்களினோர
கரிய நிலவுகளில்..

இனியெங்கு உயிர்த்தெழ?
காத்திருக்கின்றன கவிதைகள்
அவளது மழலைமொழி கேட்க..

Monday, June 6, 2011

அவனும், அவளும்..

அவன் அவனைப்பற்றியே சிந்தித்திருந்தான்..
அவனது காகிதங்களில் அவனே மூழ்கியிருந்தான்..
அவனைப்பற்றிய நினைவுகளைப் பதிவதென்பது
அவனுக்கு மிக எளிதாயிருந்தது..

அலங்கார சட்டமிட்ட கண்ணாடிகளில்
அவன் அழகாக பிரதிபலிக்கப்பட்டான்..

அவளும் அப்படித்தான்..
அவளுடைய உலகம் அவளாய் மட்டுமேயிருந்தாள்..
அவளது இறுக்கங்களைப் பிழிந்துவிட்டு
இறகுகள் பெற்றுக்கொண்டாள்..

பூக்கள் கோர்த்த மாலைகளில்
அவள் புன்னகை வழியவிட்டாள்..

பின்னொரு நாளின் மாபெரும் பொருட்காட்சியில்
அதிகமாகப் பார்வையிடப்பட்டது
அவளது மாலையிட்ட
அவனது புகைப்படச் சட்டம்...