Thursday, February 5, 2009

எடுத்துக்காட்டாய் நாம்..

சமூக அவலங்களுக்கு
சிறுபிள்ளையாய் கண்ணீர்
சிந்தாதே..

சிந்தித்துப் பார்..
சிதைந்து போன சமூகத்திற்கு
சாட்சியமாய் நீயும் இருக்கிறாய்..

சகமனிதனின் வலி உணராதவரை
சர்வமும் படைத்தவனை பூஜிப்பதில்
சத்தியமாய் ஒரு ப்ரோயோஜனமுமில்லை..

சமனற்ற கோளத்தைதான்
சீர்செய்ய லாகாது..
சீர்குலைந்த சமுதாயத்தையுமா
சீக்கிரம் மாற்ற வியலாது??

யார் மாற்றுவார்
என்பதல்ல கேள்வி..
நாம் மாறுவோம்..
நமைப்பார்த்து உலகம் மாறும்..

உண்மையான கோயில்களும், உயிர்வாழும் தெய்வங்களும்..

வியாழன்.. November 27th, 2008..
==========================
விண்ணையும் மண்ணையும்
விளைவித்தவனுக்கு இன்று
விசேட பூஜையாம்..

வரவேண்டும் என்ற தோழியரிடம்
விருப்பமில்லை என்றவளை
வருத்தி வரவழைத்தார்கள்..

தலைகுளித்து தளரப் பின்னலிட்டு
தலைகொள்ளா பூக்கள் சூடி
முகம்நிறைய வெள்ளைப் பூச்சிட்டு
முன்னால் கிளம்பியவர்களைத் தடுத்து
வினவினேன் - "கடவுளைக் காண
வேடமிட வேண்டுமா? " என்று..

அதிரும் சிரிப்புடன் சொன்னார்கள்
"அடையாளம் தெரிய வேண்டாமா?"
யாருக்கு என்றுதான் கேட்கவில்லை..!!

அர்ச்சனைத் தட்டு வேண்டாமென்றதும்
அலட்சியமாய்ப் பார்த்தார் கடைக்காரர்..
அடுத்த மதமென்று எண்ணியிருப்பாரோ??

மனனம் செய்த மந்திரங்களை
மொழிபெயராது பொழிந்தார் அர்ச்சகர்..
புரியாத மொழியில் புலம்புகிறாரா?
புரியபோவதில்லை என்று திட்டுகிறாரா?
பயபக்தியுடன் கேட்டு நின்ற
பக்தர்களை காண பாவமாயிருந்தது..

நம்மைப்பற்றி கடவுள் அறிய
நடுவிலொருவனின் நைச்சியம் தேவையா?

கைகளில் மின்னும் மோதிரமும்
கழுத்தில் சொலிக்கும் சங்கிலியும்
காணாது என்று காணிக்கையிடுமாறு
கறாராய்க் கடுகடுத்தார் அர்ச்சகர்..

அடுத்தடுத்து நாங்கள் கும்பிட்ட
அத்தனை கடவுளுக்கும் தனியே
யார்யாரோ பரிசுகள் அளித்திருந்தனர்..
ஆண்டவனுக்கு கொடுத்த அன்பளிப்புகளில்
அவரின் ஜாதியும் ஒட்டிகொண்டிருந்தது..

பாவம் தொலைக்க வருகிறோமா
பாவங்கள் பெருக்க வருகிறோமா
புரியவில்லை..

திரளான கூட்ட நெருக்கடியில்
தூரத்தில் நின்றே தரிசித்துவிட்டு
திரும்புகையில் சற்றே நின்று
இன்னும் ஒருமுறை பார்த்தேன்..
இறைவன் சிரித்ததைப் போலிருந்தது..!!

வெளியில் வந்த தோழிகள்
வேடிக்கையாய் அலுத்துக் கொண்டனர்..
"கடவுளைக் கண்குளிர பார்க்கமுடியவில்லையே?"...

திங்கள்.. December 1st, 2008
======================
பாசமும் பரிவும் உணராத
பசியும் பட்டினியும் உணர்ந்த
பச்சிளம் பிஞ்சுகளைப் பார்த்து
பொருட்கள் கொடுக்க அழைத்தனர் நண்பர்கள்..

விருப்பமில்லை என்று சொல்லாமல்
வேடம் எதுவும் புனையாமல்
வந்துநின்ற தோழியரை பார்த்து
கேள்விகள் எதுவும் தோன்றவில்லை..
கொஞ்சம் பெருமையாகவே இருந்தது...

குளிரோ வெயிலோ தாங்காத
கூரையின் கீழே குருத்துகள்..
கன்னங்கள் ஒட்டி விழுந்த
குழிகளில் தெரிந்தது வறுமை..

மூன்றிலிருந்து மூன்றைந்து வயதுகள்..
மொத்தம் முப்பத்தைந்து குழந்தைகள்..
குளிர் வாட்டி எடுத்தாலும்
குறையாத புன்னகையும் நம்பிக்கையும்..

முழுதாய் ஆடைகளில் முங்காத
முனகிக் கொண்டிருந்த மொட்டுகள்..
முட்களாய் குத்திய குளிருடன்
முட்டிமோதி வதங்கிய முகங்கள்..

கல்லாய்ச் சமைந்தவனுக்கும் கூட
கட்டிடம் இருக்க அவன்
குழந்தைகள் மட்டும் தெருவில்
குளிருக்கு இதமாய் நிலவின் கதகதப்பில்..

பனியடிக்கும் என்று கவனமாய்ப்
போட்டுச்சென்ற ஆடைகளைத் தொட்டு
"என்ன இது?" என்றவர்களிடம்
என்னவென்று சொல்வது??

அக்கா,அண்ணாவென்று உரிமையாய்
அன்புடன் அழைத்த சகோதரர்களிடம்
அடங்கிப்போனது வாழ்வின் அலட்சியம்,
அதிகபடியான அடம்,திமிர், கோபம்..

புன்னகைக்கு அதிக இனிப்பும்
குளிருக்கு கொஞ்சம் போர்வையும்
கொடுத்த போது கிடைத்த
வாழ்த்தும் புன்னகையும் ஏதோ உணர்த்தியது..

தோழி சட்டென்று சொன்னாள்..
"கடவுள் இங்குதான் இருக்கிறான்..
கண்குளிர இன்றுதான் பார்கிறேன்.."

உண்மைதான்..
உணர வேண்டிய கடவுளும்
உண்டியலிட வேண்டிய காசுகளும்
கோயில்களிலும் ஆலயங்களிலும் இல்லை..
குழந்தைகளின் சந்தோசங்களில்தான் இருக்கிறது..

உதிர்ந்து போன உறவுகள்..

செதில் செதிலான கரிய பட்டைகளோடு
சிறுசிறு வெண்ணிற பூக்கள் தாங்கி
சில்லென்று குளிர் காற்று பரப்பி
சிலிர்க்க வைத்த வேப்பமரம்..

ஊஞ்சல் கட்ட இடம்பிடிக்கும் சண்டையில்
ஊரையே கலக்கும் பெருங் கூச்சலில்
உட்கார்ந்திருந்த பிள்ளையார் ஓடிவர முடியாமல்
ஏக்கத்தோடு பார்த்த அரசமரம்..

மஞ்சளும் சிவப்புமாய் குமிழ்ந்த பூக்களோடும்
மங்களம் இசைக்கும் பச்சை இலைகளோடும்
மாடிவரை கிளைகள்விட்டு தண்டனைகளிலிருந்து தப்பிக்க
மற்றுமொரு வாசலிட்ட பூவரசமரம்..

தண்ணியும் அன்னமும் தேட மறந்து
தூரத்தில் தொங்கும் பழங்களுக்காய் மரமேறினால்
முட்களால் முகத்தையும் உடலையும் சிராய்த்தாலும்
மடிநிறைய அள்ளிக்கொடுக்கும் கொடிக்காய்மரம் ..

கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு ஒளிந்துகொள்ள வசதியாய்
கருமை படர்ந்த அடர்ந்த கிளைகளுக்குள்
பதுங்கிநின்ற வேளையில் கற்களால் பொறித்த
பெயர்களைத் தாங்கிய புளியமரம்..

தலையைக் கோதிவிட்ட தோழனாய்,
கண்ணீரைக் காயவைத்த காதலியாய்,
நிம்மதியைக் கொடுத்த உறவுகளாய்,
பகிர்ந்து கொண்ட மனசாட்சியாய்
மனமெல்லாம் பூக்கச்செய்த மரங்கள்
மண்டியிட்டு மண்ணில் கிடக்கின்றன..
நேசமாய் இருந்த உறவுகளெல்லாம்
நொடியில் விட்டுப்போன உணர்வு..

மனம்கொன்று மனிதம் தின்று
மரம்வித்த சொற்ப காசில்
மண்குடிசை மாளிகையாகும் கனவு..
வெட்டப்பட்ட மரத்துண்டுகளுக்கு நடுவில்
வியர்த்த தலையுடன் தந்தை..
அழுந்த முகம்துடைக்கும் தந்தைக்கு
அழுகையா அசதியாயென்ற யோசனையோடு
முட்டிக்கொண்டு வந்த அழுகையை
மறைக்க முடியமால் நகர்கிறேன்..

வெட்டப்படும் மரங்களுக்கு என்ன
வேதனையென்று மனிதன் எண்ணியிருக்கலாம்..
வெட்டியதும் தான் தெரிகிறது
வினையும் வலியும் மனிதனுக்கேயென்று..