Thursday, November 10, 2011

அவளும் சிறகுகளும்..

சிறகுகள் சேகரிப்பதென்றால் கொள்ளைப்பிரியம் அவளுக்கு..
ஊர் சுற்றி, காடு கடந்து அள்ளிவருவாள் சிறகுகளை..
அவளிடம் அதிக வண்ணங்களில் சிறகுகளிருந்தது.
சிகப்பு, மஞ்சள், வெள்ளை, காப்பி நிறங்கள் கலந்த
சிறகொன்றை அவள் மிகப்பத்திரமாய் வைத்திருந்தாள்.
வானின் நீலம் கொண்ட சிறகை
மேகங்களுக்குள் புகுத்தி இன்னும் நீலமெடுத்துக்கொள்வாள்.
அச்சிறகைத் தொலைத்த நாளிலொன்றில்
உணவிலும் என்னிலும் சமாதானமாகவேயில்லை அவள்.
அவைகளை புத்தகங்களில் புதைத்து அழகுபார்ப்பாள்
அவைகளை வருடிவிடுவதில் பாடம் மறந்திருப்பாள்..
அவளின் ஆர்வத்தில் நான் கொண்டுவந்த சிறகுகளை,
அவள் எடுத்துக்கொண்டதே இல்லை..
பின்னாளில் நான் உரிமைகோரக்கூடும் எனும் பயமாய் இருக்கலாம்.
எனினும் சேகரித்த சிறகுகளைப் பார்வையிடமட்டும் அனுமதித்திருந்தாள்.
சிறகுகள் குறித்த என் கேள்விகளுக்கு பதிலளிப்பதில்
இலக்கணமும் உரைநடையும் தொலைத்திருப்பாள்.
சிறகுகளின் பறவைகளை அவளுக்கு அடையாளம் காட்டுவதில்
அவளை நான் இன்னும் நெருங்கியிருந்தேன்.
புத்தகங்களின் கூடுதல் வளர்ச்சியில் குறையத்தொடங்கியது
அவளின் ஆர்வமும் என்னிடமான நெருக்கமும்.
பக்கங்கள் அதிகமிருந்தும் சிறகுகளில்லை அவளது புத்தகங்களில்.
அவளின் குழந்தைக்கென நான்கொண்டுவந்த
நீலவண்ண ஒற்றைச்சிறகை முதன்முறையாய் எடுத்துக்கொண்டாள்
கண்ணீருடனும் மெல்லிய வெட்கத்துடனும்.

No comments: