Monday, November 28, 2011

காதற்காலங்கள்..

பகலில் நீயென் பக்கமில்லை
அதனால் பகலென் விருப்பமில்லை.
இரவில் நீயென் இமைகளில்லை
அதனால் இரவுமென் இஷ்டமில்லை.
நீ என்னிடம் வரும் பொழுதென்ன?
நிலவைக் கொண்டுவரும் அந்திநேரமா?
பனித்துளியைக் கொண்டுவரும் அதிகாலையா?
பதில் சொல்லியனுப்புவாயா?

சூரியக்கதிர்களில் அஞ்சல் அனுப்பியிருப்பாயென்று
உத்திரக்கண்ணாடியில் உற்றுப் பார்க்கிறேன்.
வற்றியகிணற்றினடியில் கடிதம் வைத்திருப்பாயென்று
காக்கையைப்போல் கற்கலெறிந்து முயற்சிக்கிறேன்.
வெப்பத்துகள்களில் வியர்வைத்துளி நனைத்திருப்பாயென்று
காய்ந்த குட்டைகளில் தேடித்திரிகிறேன்.
பின், சுடும்பாறையிலும் வெடித்த நிலங்களிலும்
எழுதியிருந்தாய் ஒரு சொல்.
அதிலுன் தீண்டலொன்று மிச்சமிருந்தது.

காற்றில் காகிதம் கலந்திருப்பாயென்று
மரங்களோடு ஒற்றைக்காலில் தவமிருக்கிறேன்.
முகிலோடு செய்தி சொல்லியிருப்பாயென்று
கார்மேகங்கள் வாய்திறக்க எதிர்நோக்கியிருக்கிறேன்.
வானத்தின் வழியாய் தூதனுப்புவாயென்று
மழையின் முதற்துளிக்காய் காத்திருக்கிறேன்.
பின், தூறலோடும் குளிர் தென்றலோடும்
கொடுத்திருந்தாய் ஒருவோலை.
அதிலுன் முத்தமொன்று மிச்சமிருந்தது.

வெயிலோடு சிறு அனலும்
மழையோடு சிறு எச்சிலுமென
கலந்திருக்கிறது உன் காதல்.
இங்கே பகலெல்லாம் மழை.
இரவெல்லாம் அனல்.