Thursday, February 6, 2014

நிலவுத் தேடல்..

நிலவைப்பார்த்து வெகுநாட்களாயிற்று.. பார்க்கவேண்டுமென்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்கிறது நேரம்.. நாய்களின் இடைவிடாத ஊளைகள் எதிரொலிக்கும் இரண்டாம் சாமத்தில் நேற்றைய பகலின் அமானுஷ்ய விவாதத்தில் குறிப்பெடுத்துக்கொண்ட நாய்களின் ஊளைகள் இப்பொழுது ஒத்துப்போகிறது. தொண்டை வலித்ததோ ஆவிகள் விடைபெற்றதோ திடீர் நிசப்தம் காதில் பேரிரைச்சலைக் கிளப்பியது. பின்கதவின் சாவித்துவாரத்தில் நிலவுக்கான ஏக்கம் கண்டு கெக்கலித்த இரவுப்பூச்சிகளை வெறுப்பேற்ற சுயசமாதானத்தின் தாழ் திறக்கப்படுகிறது.. கும்மிருட்டின் கொலைமிரட்டலில் வெட்கிப்போனது அன்றைய நிலவின் இருப்பையறியாத அவசரம். எங்கு தேடியும் காணாத நிலவின் ஏமாற்றம் இரவின் மூலை முடுக்கெல்லாம் பரவியடங்குகிறது.. நேரெதிர் திசையின் கரும்போர்வைக்குள் ஒளிருமொரு வெளிச்சப்பொட்டு தகர்த்தெறிகிறது சுயசமாதானத்தை.. சட்டென ஏங்கியழும் நாயை அடித்தது யாரென புலப்படுமுன் நிலவுக்கு விடைகொடுத்து தூங்கிப்போயிருந்தேன்.. அடர்த்தியான இரவில் நிதானமாய் ஒலியெழுப்பி ஒழுகும் நீர்க்குழாயையும் நிறுத்தாமல் ஒங்கியழும் நாயையும் நோட்டமிடும் அவ்வெளிச்சப் பொட்டையும் கொஞ்சம் கவனித்துக்கொள்கிறீர்களா ? நான் நிம்மதியாகத் தூங்கவேண்டும்..

No comments: